தங்கத்திலே தொட்டில் கட்டி
தங்கமே,
உன்னைத் தாலாட்டுவேன்.
மரகதம் தான் தேடி எடுத்து
மணியே,
உனக்கு மகுடம் சூட்டுவேன்.
நியூட்டனின் விதியை மாற்றி எழுதி
என் தென்றலே,
உன் கால்கள் தரையைத் தொடாமல் தாங்குவேன்.
தேவர்களுக்கே சொந்தமாமே பாரிஜாத பூ
பொன்னே,
உன் தலையில் நாளும் சூட்டி மகிழ்வேன்.
என் வெண்ணிலவே,
வெயிலில் நீ வாடாமல் இருக்க
அந்த மேகத்தைத் தோகையாய் மாற்றி
உன் மேல் பரப்புவேன்.
காஞ்சிவரத்தை விலைக்கு வாங்கி
கண்ணே,
உனக்குக் கல்யாண பட்டு தருவேன்.
என் உயிரையே கயிறாக்கி
உயிரே,
உனக்குத் தாலிக்கொடி நான் தருவேன்.
என் காதலையே கவசமாக்கி
என் செல்லமே செல்லம்,
உன் கடைசி வரை நான் வருவேன்.

0 comments:
Post a Comment