Monday, February 27, 2012
Sunday, February 12, 2012
வர்ணஜாலமே..
(தேவதையாம் தன் தங்கையைக் கொஞ்சும்
ஒரு அண்ணனின் பாடல்)
என் கண்ணின் மணி அல்ல நீ!
ஆனால்,
நீ இல்லா அமைப்பு
புருவம் இல்லா உருவம் அது.
என் நகத்தின் தசை அல்ல நீ!
ஆனால்,
என் அகத்தினைப் பிரதிபலிக்கும்
முகம் நீ!
என் புவியின் வளி அல்ல நீ!
ஆனால்,
என் வனத்தில் நறுமணம் கமழும்
பூஞ்சோலை நீ!
என் கிழக்கின் இரவி அல்ல நீ!
ஆனால்,
என் தடம் மாறா வழிக்காட்டும்
திசைமுள் நீ!
என் வாழ்க்கை கட்டிடத்தின் தூண் அல்ல நீ!
ஆனால்,
என் கனவுகளுக்கு வலு சேர்க்கும்
கருத்தா நீ!
என் மெய்யின் உயிர் அல்ல நீ!
ஆனால்,
என் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும்
'ழ'கரம் நீ!
நீ இன்றி கடந்திட முடியும் வாழ்வை..
ஆனால்,
வண்ணங்கள் அறியா காளை போல.
வசந்தங்கள் அற்ற கோடை போல.
நாளும் நீ வலம் வர வேண்டும்,
தமையனுக்கு தூண்டுகோளாய்.
தந்தைக்கு ஊன்றுகோலாய்.
வாழிய நீ வர்ணஜாலமே!!
பொருள்:
வளி - காற்று
இரவி - சூரியன்
திரும்பிப் பார்
வாழ்க்கை நாடகம் நடிக்கும் கலைஞா,
வாழ்வின் சரிவில் சறுக்கும் மனிதா,
நிலைமை எண்ணி வருந்தும் மானுடா,
நீ வந்த பாதையைத்
திரும்பிப் பார்.
பள்ளியில் கல்வியை தள்ளி வைத்திட்டு,
ஆட்டமும் பாட்டமும் அறிவை மழுக்கிட
மதிப்பெண்ணை இழந்திட்ட நிலையைத்
திரும்பிப் பார்.
இளமையில் ஒழுக்கத்தை எட்டி உதைத்திட்டு,
பெண்ணும் ஆசையும் கண்ணை மறைத்திட
நற்பெயரை இழந்திட்ட நிலையைத்
திரும்பிப் பார்.
இடையில், நேர்மையை எண்ண மறந்திட்டு,
பொன்னும் பொருளும் அடைய எண்ணியே
பழியும் பாவமும் ஏற்ற நிலையைத்
திரும்பிப் பார்.
இன்று,
முதுமையில், பட்ட தனி மரம்
உன்னை ஏற்க உலகில் எவருமில்லை.
திரும்பிப் பார்த்த பாதையை அசைபோட்டு
காலனின் வருகையை நாளும் எதிர்பார்.
பொருள்:
காலன் - எமன்
துரோணா... தலை வணங்குகின்றோம்!!
(விதையாய் எனக்குள் இருந்த திறமை,
அடர்வனமாய் மாற துணை புரிந்த
எம் ஆசிரியர்களுக்கு வந்தனம்..)
மாதா பிதா குரு தெய்வம் என
வரிசைப்படுத்தி உங்கள் நிலை காண
விழையவில்லை நாங்கள்.
பிறந்த மணித்துளி முதல்
இறந்த பின் வழியும்
கண்ணீர்த்துளி வரை
மானுடன் என்பவன்
எப்போதும் மாணவன் தான்.
உறவுகள் சில கற்றுக் கொடுக்கும்.
உலகம் சில கற்றுக் கொடுக்கும்.
வெற்றிகள் சில கற்றுக் கொடுக்கும்.
தோல்விகள் சில கற்றுக் கொடுக்கும்.
வாழ்க்கை சில கற்றுக் கொடுக்கும்.
வயது சில கற்றுக் கொடுக்கும்.
சூழ்நிலை சில கற்றுக் கொடுக்கும்.
காயங்கள் சில கற்றுக் கொடுக்கும்.
கற்பதை மட்டும் மனிதன் கைவிடுவதில்லை.
மானுடன் எப்போதும் மாணவன் தான்.
இத்தனைக் கற்றலுக்கும்,
வாழ்கை பாடங்கள் அத்தனைக்கும்
எங்களைத் தயார்படுத்தி
தலைவர்கள் ஆக்குவது
ஆசிரியர்கள் நீங்கள் தான்.
எங்கள் கைப்பிடித்து வீதிவரை
நடைபயில கற்றுக் கொடுத்தது
எம் பெற்றோர் என்றால்,
எங்கள் கைப்பிடித்து
எங்களை எழுத்தறிவித்ததும்,
எங்கள் கரம் பிடித்து
வாழ்க்கையின் வாசல் வரை
விடைபயில கற்றுக் கொடுத்ததும்
எம் ஆசிரியோர் நீங்கள்தான்.
நாங்கள் ஏகலைவனா அர்ஜுனனா
என்பதை அறியோம்.
ஆனால்,
உங்களையே எங்கள் படிகளாக்கி
உங்கள் அறிவினைக் கைத்தடிகளாக்கி
எங்களை வெற்றியின் விளிம்புக்கு
உயர்த்தும் நீங்கள் ஒவ்வொருவரும்
பாரதம் சொல்லாத துரோணர்கள் தான்.
இமயம் கட்டி இழுத்து வந்து
காணிக்கையாக்க வலுவில்லை.
அதனால்,
இதயம் தொட்டு பணிந்து நின்று
காலமெல்லாம் வணங்குகின்றோம்.
காதல் அளவுகோல்??
என் உள்ளம் ஒரு அட்சய பாத்திரம்.
அதில் அன்பும் காதலும்
அளவில்லாமல் சுரக்கும்.
அன்பைப் பகிர்ந்தேன்
அனுதினமும் அனைவரிடமும்.
ஆனால் காதலை மட்டும்
களைந்தெறிந்தேன் சலனமில்லாமல்.
கண்ணீர் திவளைகள் கரை உடைந்து
உலகிற்கு பறை சாற்றும் முன்னே
அதைக் கவிதையாக்கி
கலைஞன் ஆகிக் கொள்கிறன்.
நான் தேடி போன காதல்கள்
மனதில் போர்க்களங்களாய் புதைந்தது.
என்னை நாடி வந்த காதல்கள்
நெஞ்சில் நளினமில்லாமல் நைந்தது.
அன்பின் வரமும்
நெஞ்சில் உரமும்
போதாதென்றால்,
காதலின் அளவுகோல் தான் என்ன?







