Wednesday, January 25, 2012

தாழம்பூ முல்லையானதோ!!



(தன் தமக்கை தாய்மை பேறினை அடைய போவதை அறிந்த
சகோதரனின் சந்தோஷ சிதறல்கள்.. )



தாழம்பூ ஒன்று 
முல்லையானதோ இன்று.

மாரனின் தாரமே,
குறும்பு செய்யும் குழவி
நீயென நாங்கள் நினைக்கையிலே
குமரி என்னும் நிலை தாண்டி
குலம் காக்க
குழந்தைப் பேறினைச் சுமந்திட்ட
ஆயவள் நீயென உணரச் செய்தாயோ?

தமையன் என்னும் தரத்தை உயர்த்தி
தாய்மாமன் என்னும் மகுடம்
அளித்த மணிவிளக்கே,
உனைப் போன்ற தடங்கண்ணும்
தமிழ் போன்ற பேரழகும் கொண்ட
இறகையில்லா தேவதை ஒன்றை
உலகிற்கு அறிவிப்பாயோ?
என் மடியில் அதனை தந்திடுவாயோ?

உன் மழலை கண்டிட
தேவை எனக்கு ஒன்பது திங்கள்.

வாயுவோடு வாதிட்டு 
வானின் செல்லினங்கள் எடுத்து வந்து
தொட்டில் கட்ட 
தேவை ஒரு திங்கள்.

வருணனோடு போரிட்டு
வானவில்லை எடுத்து
தொட்டில் மேல் அலங்கரிக்க 
தேவை ஒரு திங்கள்.

சிவனோடு சண்டையிட்டு
பிறைமதியை பறித்து வந்து
பிள்ளை அருந்தும் பால்சங்காக்க 
தேவை ஒரு திங்கள்.

தேவர்களை தேடவிட்டு
நட்சத்திரங்களை ஒன்று கூட்டி
கிறங்கச் செய்யும் கிலுகிலுப்பை செய்திட 
தேவை ஒரு திங்கள்.

மலர்களிடம் மண்டியிட்டு
அவற்றின் நிறங்களை நிறைத்து வந்து
ஆடை கட்டி அள்ளி தர
தேவை ஒரு திங்கள்.

இசையிடம் இனிதே வேண்டி
சங்கீதங்களைச் சங்கமித்து
தலைப்பிள்ளைக்குத் தாலாட்டாய் தந்திட
தேவை ஒரு திங்கள்.

விஷ்ணுவிடம் விவாதித்து 
சுழலும் சுதர்சனத்தை வாங்கி
நடைபயிலும் சக்கரமாய் சுழலவிட
தேவை ஒரு திங்கள்.

அனுமனிடம் அனுமதி வாங்கி
சஞ்சீவி மலையின் சர்வ சித்தங்களையும்
சிறுமதலைக்கு மருந்தாய் மாற்றிட
தேவை ஒரு திங்கள்.

மதுசுரம் நீட்டிய மதுவோடு
பெற்றத்தின் வெண்பாலும் பலாவும்
கலந்திட்ட சுவைதரும் பெயர் ஒன்றை தேடிட
தேவை ஒரு திங்கள்.

பார் போற்றும் பதுமம்தனை கண்டிட
வருவேன் பத்தாம் திங்கள்.

மொய்ம்போடு இரு!
கொண்கன் தானே உள்ளான் உன்னோடு!
எல்லும் சோமனும் மாறி மாறி வருவர் பின்னோடு!
குமிண்சிரிப்பு கொட்டிடும் 
குழந்தை தானே வரும் தன்னோடு!

தாழம்பூ ஒன்று 
முல்லையானதோ இன்று..


பொருள்:
மாரன் - மன்மதன்
ஆய் - தாய்
தடங்கண் - பெரிய கண்.

செல்லினங்கள் - மேகக்கூட்டங்கள் 
சுதர்சனம் - விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம்
மதலை - குழந்தை
மதுசுரம் - தேனீ
பெற்றம் - பசு
மொய்ம்பு - உறுதி
கொண்கன் - கணவன்
எல் - சூரியன்
சோமன் - சந்திரன்
குமிண்சிரிப்பு - அழகிய சிரிப்பு

0 comments:

Post a Comment