என் நாட்டின் கதை கொஞ்சம் கேளுங்கள்.
இந்நாட்டின் பிரதிகள் நீங்கள் என்றால்
தலை குனிந்து வாழுங்கள்..
தோழர் பெருமக்களே,
சனிக்கு எள்ளும் எண்ணையும்
இங்கு நாம் ஏற்றிக் கொண்டிருக்க,
சனியில் குடியேற ஆயத்தம்
ஆகிக் கொண்டிருக்கிறதாம்
எங்கோ ஓர் இடத்தில்!
குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என
நாம் வரலாறு கூவிக் கொண்டிருக்க,
மனிதனே இல்லாமல் மனிதன் வருவான் என
இயங்கிக் கொண்டிருக்கிறது ஓர் கூட்டம்!
பாபர் வருவார் என ராமர் நினைத்திருந்தாலும்
ராமர் இருந்தார் என பாபர் நினைத்திருந்தாலும்
தம்மால் பின்னால் ஓர் யுத்தம் வருமென
இவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை...
காமராசனுக்கும் கக்கனுக்கும் மீண்டும்
நாம் காத்துக் கொண்டிருக்க
வந்தவனெல்லாம் வாரிச் சுருட்டிக் கொள்வதை
வறியவன் நம்மால் தடுக்க இயலாது!
காப்பீடு திட்டங்கள் எல்லாம் வெறும்
வாய்பார்க்கும் விட்டங்களாய் தான் உள்ளன..
காவல்துறை சட்டங்கள் யாவும்
காலாவதியாகி விட்டன..
நீதியின் வழிகள்
நீர்த்து போய் விட்டன...
வாதியும் பிரதிவாதியும்
வக்கீலின் கறவை மாடுகள் ஆயின..
பட்டம் பெற்றவன் எல்லாம்
சதித்திட்டம் தீட்டுகின்றான்..
பையிலே நோட்டு,
கையிலே ஓட்டு!
ஜனங்களோடு ஒட்டாத ஓர் ஜனநாயகம்!
எங்கள் நாட்டிலும் அப்துல் கலாம் என்னும்
அதிமேதை உள்ளான் என
மார் தட்டிக் கொள்ளும் மாந்தர்களே,
இன்னும் பல ஆயிரம் கலாம்கள்
பரிந்துரை இல்லாமல் பலியாடாய் தான் உள்ளனர்!
சந்திராயனை பறக்க விட்டோம் என
சந்தோஷத்தில் மிதக்கும் சத்தியவான்களே,
இன்னும் பல லட்சம் சந்திராயன்கள்
பறக்க வழியின்றி புதைந்து தான் உள்ளது!
உணர்வுள்ள தோழர்களே,
உங்கள் நெஞ்சிலே புகையும் நெருப்புகள்
எரிமலையின் குழம்புகளாய் வெம்பட்டும்!
அழிவு என்னும் அகராதி நெருங்கும் முன்னே
நச்சுக் கழிவுகளை வெளியேற்றி கடல் கடத்துங்கள்!
வளர்ச்சியை நோக்கிடும் உணர்வுகள் இல்லாத வரை
வல்லரசு என்பது வெறும் கானல் நீர் தான்!!


0 comments:
Post a Comment