Sunday, January 8, 2012

நட்புக்காக



(தனக்காக உயிரை இழந்த நண்பனைக் கண்டு 
தானும் உயிரைத் துறக்கிறான் வீரன் ஒருவன்.
அவர்தம் நட்பினை மெச்சி வீரனின் காதலி பாடும் பாடல்)

இங்கே ரெண்டு விதைகள் கிடக்குது,
மண்ணில் விதைத்து மானுடம் காணுங்கள்.
உள்ளே உள்ள உள்ளங்கள் மட்டும்
காற்றில் கலந்ததன் காவியம் பாடுங்கள்.

என் கண்ணனும் இங்கே துயில்கிறான்.
அவன் கர்ணனும் அருகே கிடக்கிறான்.

சங்கம் தேடி பார்த்ததில்லை.
முன்னோர் கதையைக் கேட்டதில்லை.
நெஞ்சம் அறிந்த இலக்கணம் எல்லாம்
இந்த இருவர் கொண்ட நட்பை மட்டுமே!

இவர் தோளில் ஏற்றிக் கொண்ட 
நட்பின் கதையை எங்கே துவக்குவது?

நேற்று வரை காதலில் கரைத்த என் மன்னன்
இன்று என்னைக் கண்ணீரில் கரைக்கின்றான்.
எனக்குள் கூடி ஓர் உயிரைக் கொடுத்த தலைவன்
நட்பைத் தேடி தன உயிரைக் கொடுத்தானோ?

தோழன் அவன் வாழ்ந்ததும்
தோழமைக்காக!
இன்று மாய்ந்ததும்
என் நாதனுக்காக!

இவர் கால்தடம் பதித்த பாதைகள் யாவும்
இப்போது கலக்கத்தில் ஆழ்ந்ததோ?

இவர் வாசம் அறிந்த அந்த மரங்கள்,
இப்போது சுவாசம் விட மறுக்கின்றதோ?

இவர் விளையாட்டை ரசித்த விழிகளும்
இப்போது விக்கித்து போனதோ?

இவர் கலகலப்பாய் செய்த காதல்கள் எல்லாம்
இப்போது களையின்றி காற்றில் காய்கின்றதோ?

இவர் பிரிவைக் கேட்டு 
திரளும் கூட்டங்களே,
மிரளும் மேககூட்டத்தைப் பாருங்கள்.

சோகத்தில் மேகத்தின் சரீரமும்
கருத்துப் போனதைப் பாருங்கள்.
அவை கண்ணீரைக் கொட்டி
கதறி அழும் நேரம் இதுவோ?

இவர்கள் மையல் கொண்டவர்கள்.
நட்பின் மையம் நின்றவர்கள்.
எவரேனும் ஒருவர் இப்போது எழுந்தாலும்,
உயிரைப் பங்கீட்டு மீண்டும் வருவார்கள்.

ஓய்வின்றி நட்பாண்ட இவர்களை
சற்று உறங்கச் சொல்லுங்கள்.
முற்றுப்புள்ளி ஓவியத்திற்கு மட்டுமே,
தூரிகைக்கு அல்ல!!

0 comments:

Post a Comment