Thursday, February 7, 2013

எங்கப்பன்..




திண்ணையில சாஞ்சிருந்த 
எங்கப்பன காணலியே 
தெரு பொறுக்க போனாரோ 
யார கெடுக்க போனாரோ 

பன்னெண்டு வயசப்போ எனக்கு 
கூத்தியாள கூட்டாந்து 
கூர மேல தூக்கி வச்சு 
கோபுரமா இருந்தவள
குப்ப மேடு தள்ளிட்டான்

தவமிருந்து பெத்த என்ன 
தனியாளா நின்னு வளத்து 
உலகம் எனக்கு புரிய வச்சு 
சீக்கு பிடிச்சு செத்தாளே 
சீதை அவ சீமாட்டி 

காச நோயும் வந்து நின்னு 
காஞ்சு கிடந்தான் எங்கப்பன் 
சொகத்துக்கு வந்தவளும்
சுதி இழந்து போனாளே 

அடுத்த வீட்டு அய்யாசாமி 
ஆறுதலா அரவணைக்க 
அந்தி சாயும் நேரத்துலே 
ஆத்த கடந்து ஓடினாளே 

காசிருந்தும் காச நோயால் 
கருகிப் போன எங்கப்பன் 
சோறு போட நாதி வேண்டி 
எந்திண்ணையில  சேந்தானே 

திண்ணையில சாஞ்சிருந்த
எங்கப்பன காணலியே 
தெரு பொறுக்க போனாரோ 
யார கெடுக்க போனாரோ 

உயிரு போனா போகுது 
உயிலு எங்க வச்சிருப்பான் 
உலகம் காட்டுன உத்தமன் 
உருப்புடாத எங்கப்பன்.. 

0 comments:

Post a Comment